சென்னை: தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 6.98 சதவீதம் வரும் 5ம் தேதி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.6000 கோடி மதிப்பில் 10 ஆண்டு காலங்களுக்கு ரூ.2000 கோடி, 30 ஆண்டு காலங்களுக்கு ரூ.2000 கோடி மற்றும் மறுவெளியீட்டின் வாயிலாக ரூ.2000 கோடி மதிப்புள்ள 6.98 சதவீத தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கடன் 2031 ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 5ம் தேதி நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் வரும் 5ம் தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.