சென்னை: திமுகவுடனான 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவானது.
இதை தொடர்ந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில், ‘‘திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதில், ‘‘திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரா.முத்தரசன் அளித்த பேட்டியில், ‘‘திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் செய்து கொண்ட உடன்பாடு அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதி என்பது குறித்து பின்னர் கலந்து பேசி முடிவு செய்யப்படும். நாடு காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். மதசார்பின்மை கொள்கை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு ஆகியிருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு சிக்கலும் இல்லை. நீங்கள் யாரும் எந்த சிக்கலையும் எங்களுக்குள் ஏற்படுத்த முடியாது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘‘திமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இருக்கக்கூடிய நிலையில், மேலும் பல கட்சிகள் வரக்கூடிய சூழ்நிலையில் இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எங்களை பொறுத்தவரை நாங்கள் வெற்றி பெற்று இருக்கிற 2 தொகுதிகளை வற்புறுத்தி கேட்டு இருக்கிறோம். இதில் எந்த பெரிய பிரச்னையும் வராது. வேறு சில தொகுதிகளை மாற்ற வேண்டியது உள்ளதால் எங்கள் தொகுதியை நிறுத்தி வைத்துள்ளார்கள். அவ்வளவு தான். கமல்ஹாசன் வருவார் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 40 தொகுதிகள் எங்கள் தொகுதி என்ற அடிப்படையில் பணியாற்றுவோம்’’ என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் 2 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன், மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன் ராஜ், பொருளாளர் செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் கூறுகையில், ‘‘திமுக பேச்சுவார்த்தை குழுவினரிடம் கடந்த முறையை போல ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கிறோம். அதுவும் எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உறுதியாக, அறுதியாக தெரிவித்து இருக்கிறோம். இந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும்” என்றார்.