சென்னை: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நாளை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!
உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.
தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம்.
பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.