சண்டிகர்: கண்ணீர் புகை குண்டால் விவசாயி பலியான சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்திற்கு பின் கொலை வழக்கு பதிவு ெசய்யப்பட்டது. இன்று சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 21ம் தேதி பஞ்சாப்-அரியானா எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, விவசாயிகளின் மீது அரியானா பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பாதிக்கப்பட்ட பதிண்டாவைச் சேர்ந்த விவசாயி சுப்கரன் சிங் (21) பலியானார். பாதுகாப்புப் படையினர் 12 பேர் காயமடைந்தனர். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இறந்த சுப்கரன் சிங்கின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பாட்டியாலா அடுத்த பட்ரான் காவல் நிலைய போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் 302, 114 ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட எப்ஐஆர் படி, சம்பவம் நடந்த இடம் அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கார்ஹி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு பதிவு செய்தது பஞ்சாப் காவல் துறையாகும். தற்போது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சுப்கரன் சிங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கப்படும் என்று விவசாய சங்க தலைவர்கள் கூறினர். தற்போது சுப்கரன் சிங்கின் சடலம் பாட்டியாலாவில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று சுப்கரனின் உடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சுப்கரனின் சகோதரிக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அரசு வேலையும் வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை தூண்டுவோரின் பாஸ்போர்ட் முடக்கம்: அரியானா மாநிலம் அம்பாலா போலீஸ் டிஎஸ்பி ஜோகிந்தர் சர்மா கூறுகையில், ‘பஞ்சாபிலிருந்து அரியானாவுக்குள் நுழைந்து பல்வேறு போராட்டங்களை தூண்டிவரும் நபர்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். மேலும் அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் சேகரிக்கப்பட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்கள் ரத்து செய்யப்படும்’ என்று கூறினர்.