புதுக்கோட்டை, பிப்.29: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் மரிய விமலா ஜான்சிராணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு, மாணவர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கி அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி ‘அறிவொளி’ கருப்பையா பேசியது:
இவ்வுலகே அறிவியலால் இயங்குகிறது என்பதை மாணவர்களிடையே விதைக்க வேண்டுமெனில் அதற்கு அறிவியல் கண்காட்சிகள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட வேண்டும். தனித்திறமை மேம்படும்.
மாணவர்களிடையே கேள்வி கேட்கும் திறனை அதிகரிப்பதுதான் அறிவியல். ஒவ்வொன்றுக்குமான அறிவியல் எதார்த்தங்களை புரிந்துகொண்டால் உயர்கல்வி எளிது. போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பும் எளிதாகும். மேலும், அறியாமையை முழுமையாக அகற்ற முடியும் என்றார். நிகழ்ச்சியில், ஏடிஎம் மெஷின் இயங்கும் விதம், காற்றாலை மின் உற்பத்தி, இயற்கை உணவுகள், பெரிஸ்கோப் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிபடுத்தி இருந்தனர். கண்காட்சியை பெற்றோர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் பார்வையிட்டனர்.