வந்தவாசி, பிப். 29: வந்தவாசி அருகே நிலத்தகராறு காரணமாக விவசாயி தலைமீது மண்வெட்டியால் தாக்கிய தந்தை, மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன்(73). இவர் அருகே உள்ள மகமாயிதிருமணி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது விவசாய நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கினாராம். இந்த நிலத்திற்கு பக்கத்தில் ராமலிங்கத்தின் சகோதரர் சண்முகத்தின் நிலம் உள்ளது. இதனால் சண்முகத்திற்கும், சுப்புராயனுக்கும் இடையே அடிக்கடி வரப்பு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி சுப்புராயன் தனது நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த சண்முகம், அவரது மகன் சுதாகர்(25) ஆகியோர் தகராறு செய்து சுப்புராயனை சரமாரி தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்த மண்வெட்டியால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சுப்புராயன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுப்புராயன் தேசூர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சண்முகம், சுதாகர் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.