சென்னை: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று பேசினார். தொடர்ந்து இன்று திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மேலும் அரசு சார்பில் நடைபெறும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். 2 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து மீண்டும் மார்ச் 4ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக அவர் சென்னை வர உள்ளார்.
இதற்காக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாஜவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அன்றைய தினம் பிற்பகலில் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகிறார். இதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது. மாலை 3 மணியளவில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழகத்துக்கு வருவது பாஜ தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்களும் தமிழகத்திற்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான பிரசார அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.