அரியலூர்: அரியலூர் அருகேயுள்ள நல்லாம்பத்து கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரகுவரன்(30). தனியார் பஸ் டிரைவர். இவரும், பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. ஆனாலும் மாணவி, கல்லூரிக்கு சென்று வந்தார். இதையறிந்த ரகுவரன் நேற்று மாணவி படிக்கும் அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் இருந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்து கொண்டது குறித்து கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த ரகுவரன் தான் ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த பிளேடால் திடீரென கழுத்து, கைகளை அறுத்துக் கொண்டார். இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த கல்லூரி பேராசிரியர்கள் ரகுவரனை ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியலூர் போலீசார் டிரைவர் ரகுவரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.