கோவை : பிரதமர் மோடி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மாலை நடக்கும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பிரதமர் மோடி இன்று காலை 10.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு வந்தார். அங்கு ரூ.1800 கோடி செலவில் 3 முக்கிய விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார்.
மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதியையும், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் புதிய செமி கிரையோஜெனிக்ஸ் ஒருங்கிணைந்த இன்ஜின் மற்றும் நிலை சோதனை வசதி மற்றும் திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சில் விண்வெளித்துறைக்கான உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் 3 திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று மதியம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி சூலூர் விமானப்படை தளம் வந்தடைந்தார்.
அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 5 மணிக்கு மதுரை வீரபாஞ்சான் தனியார் பள்ளிக்கு வருகிறார். இங்கு மாலை 5.15 மணியளவில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.