சென்னை : பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, “பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவத்துறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும்.
வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணிக்கு அதிகமான காலியிடங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணிக்கு காத்திருக்க வேண்டிய சூழல் வரும். இதற்கு ஒரு எளிதான வழியை அரசின் சார்பில் அறிவிக்கிறோம். இளநிலை உதவியாளர் பணியிடமும் தட்டச்சர் பணியிடமும் ஒரே ஊதிய அளவுள்ளவைகள். எனவே இளநிலை உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் காத்திருந்து அப்பணியை பெற்று கொள்வதை காட்டிலும் ஒரு 6 மாத காலம் தட்டச்சர் பயிற்சியை பெற்று விண்ணப்பித்தால் தட்டச்சர் பணிக்கான ஆணைகள் வழங்கப்படும்,” இவ்வாறு தெரிவித்தார்.