கேரளாவில் மொத்தம் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே தான் முக்கிய போட்டி நிலவுகிறது.
இடதுசாரி கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இக்கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் நேற்று அறிவித்தார். இதன்படி திருச்சூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சுனில்குமாரும், மாவேலிக்கரையில் அருண்குமாரும், திருவனந்தபுரத்தில் முன்னாள் எம்பி பன்னியன் ரவீந்திரனும், வயநாடு தொகுதியில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவியும் தேசிய நிர்வாகியுமான ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர்.
வயநாட்டில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுவதால் தான் இந்தத் தொகுதியில் இடதுசாரி கூட்டணி தேசிய நிர்வாகியை களத்தில் இறக்கியுள்ளது. தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற சசி தரூரிடமிருந்து திருவனந்தபுரம் தொகுதியை கைப்பற்றுவதற்காக இதே தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் எம்பியான மூத்த தலைவர் பன்னியன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.