சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்தவுடன், திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியலை மார்ச் 10ம் தேதிக்குள் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அவர், பிரமாண்ட பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று பேச உள்ளார். இதற்காக மண்டல வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்த திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. டெல்டா மண்டலம், தென் மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், சென்னை மண்டலம் என 5 மண்டலங்களுக்கும் சென்று பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை, ஒரே மேடையில் அமர வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.
இதற்கான சூறாவளி சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. சுற்றுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதேபோல, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 40 தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான பிரசார வியூகம் திட்டங்களும் தயாராகி வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதியின் பிரசாரம் முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது. இதேபோல, திமுக முன்னணியினரும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.