கொள்ளேகால்: பெண் விவசாயி மீது வனத்துறை ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக விவசாய சங்க மாநில தலைவர் படகலபுரா நாகேந்திரா கூறினார். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே ஊக்கியம் கிராமத்தின் அருகே சில தினங்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் வயலுக்கு யானை வந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஊக்கியம் வனத்துறை அலுவலகத்திற்கு போன் செய்துள்ளனர். அன்று இரவு வனத்துறையினர் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. மறுநாள் யானை இறந்தது என வனத்துறைக்கு போன் செய்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்துள்ளனர். பொய் தகவல் கூறியதாக அவர்களுக்கும், கிராமத்தினருக்கும் வாக்குவதம் ஏற்பட்டதாக கூறப்படுகிது. அப்போது சுசீலா என்பவரை வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஊக்கியம் வனத்துறை அலுவலகத்தின் எதிரில் கிராமத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், போராட்டம் நடந்த இடத்திற்கு விவசாய சங்க மாநில தலைவர் படகலபுரா நாகேந்திரா வந்தார். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என கூறினார்.