பாஜ கூட்டணியில் தமாகா இணைகிறது. 5 தொகுதிகளுக்கான பட்டியலை ஜி.கே.வாசன் அளித்தார்.பாஜ நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முடிவானது. இந்த பேச்சுவார்த்தையில் தமாகா தரப்பில் 5 தொகுதிகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியும், டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதியும், தென்மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதியை உறுதியாக தரும்படியும் தமாகா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. தமாகா, பாஜ கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜி.கே.வாசன் இன்று காலை அறிவிக்கிறார். இதே போல புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், தமிழருவி மணியன் ஆகியோரையும் அரவிந்த் மேனன் சந்தித்து பேசினார்.