காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் செந்தில் (எ) ஆனந்தன் (41). இவர், காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் துணி இஸ்திரி போடும் கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை இஸ்திரி கடையில் மனைவி மணிஷாவிடம், செந்தில் குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது, கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, மனைவியுடன் கோபித்துக்கொண்டு செந்தில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மீண்டும் அவர் கடைக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி மணிஷா, தனது உறவினர் லோகேஷ் என்பவரிடம் தெரிவித்து, வீட்டில் பார்க்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டிற்குச் சென்று லோகேஷ் பார்த்தபோது, செந்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், செந்திலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.