சென்னை: டோக்கன் வழங்கிய தேதியில் ரேஷன் கடைக்கு சென்ற போது கடை மூடப்பட்டிருந்ததால், பரிசுத் தொகை வாங்க முடியவில்லை. எனவே அதை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பரிசுத்தொகையை முறையாக வழங்காமல், ரேஷன் கடைகளின் பொறுப்பாளர்கள் ரூ.140 கோடியை அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, யார் யாருக்கெல்லாம் பரிசுத் தொகை கிடைக்கவில்லை என்ற விவரங்களை சமர்ப்பிக்குமாறு மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.