சென்னை: ஒருங்கிணைந்த நூலக பணி உள்பட 3 தேர்வுகளுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவியில் (நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வை கடந்த 13.5.23 அன்று நடத்தியது. இதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் 2452 பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணியில் அடங்கிய மக்கள் திரள் போட்டியாளர் பதவியில் காலியாக உள்ள 1 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தற்காலிமாக 53 பேரும், தமிழ்நாடு சிறை சார்நிலை பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பதவியில் 1 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் 85 பேரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 7ஏ பதவியில் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலை பணியில் செயல் அலுவலர் (கிரேடு 1) காலியாக உள்ள 9 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு தற்காலிகமாக 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பட்டியலும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.