திருக்கழுக்குன்றம்: வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நால்வர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பட்சி தீர்த்தம் என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள நால்வர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் மிகவும் விமரிசையாக நடந்தது. சமயக் குறவர்களான 63 நாயன்மார்களில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்மந்தர் ஆகிய 4 நாயன்மார்களால் ஒருங்கே பாடப்பெற்ற ஒரே தலம் இந்த வேதகிரீஸ்வரர் திருத்தலமாகும்.
நால்வர் வந்து இங்கு பாடியதால் இங்குள்ள கிரிவலப்பாதை அருகே நால்வர் கோயில் தனியே அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று, திருப்பணிகள் முடிவுற்றநிலையில் நேற்று முன்தினம் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நால்வருக்கு மகா கும்பாபிஷேகம் மிகவும் விமரிசையாக நடந்தது.
இந்த கும்பாபிஷேகத்தை காண திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கும்பாபிஷேகத்தை கண்டு, நால்வரை வணங்கிச்சென்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளையும் நால்வர் கோயில்பேட்டை ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பர் தொண்டரணியினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில், பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் இலட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.