வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் இன்று 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியது. போலீசார் அதை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையோரம் பம்ப் ஹவுஸ் உள்ளது. இந்த பம்ப் ஹவுஸ் அருகே இன்று காலை 13 பொட்டலங்கள் கரை ஒதுங்கியிருந்தது. இதை பார்த்த மீனவர்கள், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது தலா 2 கிலோ வீதம் 13 பொட்டலங்களில் 26 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தி சென்றபோது கஞ்சா பொட்டலங்கள் தவறி விழுந்ததா அல்லது கடலில் இந்திய கடற்படை கப்பல் ரோந்து சென்ற போது பார்த்து அச்சமடைந்து கஞ்சா பொட்டலங்களை கடலில் வீசியதால் கரை ஒதுங்கியதா, கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரித்து வருகின்றனர்.