புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து (வடக்கு- கிழக்கு) எஸ்பி செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- மாசிமகத்தின்று 24ம் தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தமிழகப் பகுதியில் உள்ள முக்கிய கோயில்களில் இருந்து பல்வேறு சாமி சிலைகள் குருசுக்குப்பம் மற்றும் வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள விழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு `தீர்த்தவாரி’ செய்யப்படும். தீர்த்தவாரியில் கலந்து கொள்ள பொதுமக்களும், பக்தர்களும் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு புதுச்சேரி நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் 24ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மரியாம்மன் கோயில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.
ஆதலால் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இசிஆரில் வரும் அனைத்து வகை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இசிஆர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி மறைமலை அடிகள் சாலை வழியாக – நெல்லித்தோப்பு- இந்திரா காந்தி சதுக்கம்- ராஜீவ் காந்தி சதுக்கம்- சிவாஜி சிலை வழியாக காலாப்பட்டு வழியாக சென்னை செல்ல வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.