வேளச்சேரி: ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கிவந்து சென்னை வேளச்சேரி, தரமணி பகுதிகளில் விற்பனை செய்த கல்லூரி மாணவரை கைது செய்தனர். சென்னை வேளச்சேரி அடுத்த தரமணி மற்றும் கானகம் கட்டபொம்மன் தெரு பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தரமணி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்அடிப்படையில், அந்த பகுதியில் நேற்றிரவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை நடத்தினர். அவரது பாக்கெட்டில் 900 போதை மாத்திரைகள் மறைத்துவைத்திருந்தார். இதனால் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த நபர், கானகம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த குகன்(19) என்பதும் வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பிபிஏ முதல் வருடம் படித்துவருவதும் தெரிந்தது.2 வாரங்களுக்கு முன்பு ரயிலில் ஐதராபாத் சென்று அங்கிருந்து போதை மாத்திரைகளை வாங்கிகொண்டுவந்து சென்னைக்கு வந்து நண்பர்கள் மற்றும் சக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார். ஒரு மாத்திரையை 300 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து விசாரணைக்கு பிறகு குகனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.