தர்மபுரி, பிப்.20: தர்மபுரி மாவட்டம், சோகத்தூர் கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சோகத்தூரில், கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில், காளைகளின் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டது. இதே போல் தடங்கம் பகுதியில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியின் போது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டும் தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த, சிலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தர்மபுரியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை வணிக ரீதியில் நடத்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, கட்டாய பண வசூல் செய்வதை தடுத்து நிறுத்தவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.