மதுரை, பிப். 17: வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனம் சார்பில், அகில இந்திய அளவில் நேற்று ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி மதுரை வருமான வரி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருமான வரி ஊழியர்கள் சம்மேளன அமைப்பு செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதுடன், 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான வேலையை அனைவருக்கும் வழங்குவதுடன், தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் வெங்கடேசன், சரக செயலாளர் மாரியப்பன், கிளை பொருளாளர் லிங்கராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.