திருமங்கலம்: சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8.15 மணியளவில் திருப்பரங்குன்றம் – திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில், அவரது கழுத்துப்பகுதி இன்ஜினில் சிக்கி நின்ற நிலையிலேயே அந்த வாலிபரின் உடல் இன்ஜினில் இழுத்து செல்லப்பட்டது. திருமங்கலத்தை ரயில் கடந்தபோது, வாலிபர் உடல் இன்ஜினில் சிக்கியிருப்பதை ஸ்டேஷன் மாஸ்டர் பார்த்து ரயிலை நிறுத்த முயன்றார்.
அதற்குள் ரயில் திருமங்கலம் ஸ்டேஷனை கடந்து சென்றது. உடனடியாக, இதுகுறித்து கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கள்ளிக்குடியில் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் வாலிபர் உடலை மீட்டனர். சுமார் 15 கிமீ தூரம் நின்ற நிலையில் உடலுடன் ரயில் வந்துள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தற்கொலை செய்தவர் திருமங்கலம், ஆறுமுகம் நகர் வடபகுதியைச் சேர்ந்த முருகன் (36) என தெரிந்தது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதனால் அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.