கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்னமல்லி கிராமத்தில் இன்று காலை விவசாய நிலத்தின் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த இரும்பு வேளையில் மான் ஒன்று சிக்கி இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த மானை மீட்டு கிராமத்திற்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பாக மாதர்பாக்கம் வனத்துறை அலுவலக அதிகாரிகளுக்கு கிராமத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறை அலுவலக அதிகாரிகள் மானை மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட மான் பெண் புள்ளிமான் எனவும், அந்த மானுக்கு சுமார் மூன்று வயது இருக்கும் எனவும், தண்ணீருக்காக வழி மாறி வந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்ததை தொடர்ந்து அந்த மானை மீட்டு சென்ற வனத்துறையினர் மாதர்பாக்கம் அருகே அமைந்துள்ள நேமலூர் காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர்.