சென்னை: வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உடல்நிலை பற்றிய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் படி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2016ம் ஆண்டு கோவையை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்பாளர்களுடன் உடல்நிலை குறித்த பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்டோரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் விவரம் கேட்க முடியாது. மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த, சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருசோத்தம்மன், தான் தேர்ந்தெடுக்கப்போகும் பிரதிநிதியின் உடல்நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவ காப்பீடு பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கை அளிக்க கூடிய நிலையில் வேட்பாளர்களுக்கு என அதை வலியுறுத்த கூடாது என்ற கேள்வியை எழுப்பி வாதிட்டார்.
இதையடுத்து வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள் அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள் உடல் தகுதி சான்று சமர்ப்பிக்கவேண்டி இருக்கிறது. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மக்கள் கடமையாற்றுவதற்கான உடற்தகுதியை பெற்றிருக்கிறார்களா என்பதை குறித்த சான்றை பெறலாம் என்ற யோசனையை தெரிவித்தார். பின்னர் உடல்தகுதி சான்றை வற்புத்த முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 13ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.