திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு நேற்று வந்த ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் ஆகியோர் தங்களது குழந்தைக்கு முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது ஜெ.தீபா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியலை விட்டு விலகி ரொம்ப நாளாச்சு. இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் இரட்டை இலைக்கு அடிச்சுக்கிறத விளையாட்டாக பார்க்கிறேன். பிளே கிரவுண்டு மாதிரி ஆயிருச்சு. மாத்தி, மாத்தி எனக்கு உனக்குன்னு போட்டி போட்டுக்கறாங்க. நான் ஏதாவது சொன்னா அப்புறம் சிரிக்கக் கூடாது. அதிமுக நாடாளுமன்ற தேர்தல்ல 40 தொகுதியிலும் ஜெயிக்கிறதுங்கறது கனவுல தான் நடக்கும்.
அதிமுக, பிஜேபி கூட கூட்டணி வைக்கறத கட்சியின் பொதுச்செயலாளர்தான் முடிவு செய்யணும். அதிமுக தனித்தனி அணியாக பிரிந்திருப்பது பலவீனம்தான். இதுபத்தி கருத்து ஏதும் சொல்ல முடியாது. சேர்ந்தாலும் அப்படித்தான் இருக்கும். ஆளுநர் விவகாரம் தவறான செயலாகத்தான் பார்க்கிறேன். முழுமையான விபரம் தெரியலை. தமிழக அரசு கொடுத்த உரையை ஆளுநர் படிக்காதது தவறுதான். ஆளுநருக்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டியது கடமை. தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆளுநருடன் இதுவரை இதுபோன்ற மோதல்கள் நடந்ததில்லை. ஆளுநர் அவர் பணியை செய்யட்டும். தமிழ்நாடு அரசு அவர்களது பணியை செய்யட்டும். இவ்வாறு கூறினார்.
* மாஜி ராணுவ வீரர்கள் கட்சி 543 தொகுதியில் போட்டி
கோவை பிரஸ்கிளப்பில் முன்னாள் ராணுவ வீரர்களின் வீரோ கே வீர் கட்சியின் தென்னிந்திய தலைவர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறியதாவது: முன்னாள் ராணுவ வீரர்களின் வீரோ கே வீர் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிட உள்ளது. இதனை தேசிய தலைவர் லால்ஜிபாய் போடார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை, பொள்ளாச்சி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில், நான் கோவையில் போட்டியிடுகிறேன். இக்கட்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள் மட்டும் இல்லை. மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒருங்கிணைந்த கட்சியாக இருக்கும். இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் ராணுவ வீரர்கள் போட்டியிட உள்ளனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை தான் எங்களிடம் உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் பிரசாரம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். அப்போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்கப்படும். எங்கள் கட்சிக்கு பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* தென்காசியில் போட்டி உறுதி
சங்கரன்கோவிலில் பாஜ சார்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மேலாண்மை குழுவினருக்கான பயிலரங்கம் நடந்தது. இதில் பாஜ மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டு பேசுகையில், ‘தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளர் தான் போட்டியிடுகிறார். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜ வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.
* 5 தென்மாவட்ட தொகுதியில் போட்டியிட பாஜ விருப்பம்
தென் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் யார் என பிரதான கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரிடையே விவாதம் முற்றி வருகிறது. பாஜவை பொறுத்தவரை தென்மாவட்டங்களில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது சொந்த கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்பதும் பேசு பொருளாகி விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பாஜக சார்பில் தேர்தல் மேலாண்மை குழுக்கூட்டம் நெல்லை சந்திப்பில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கிட்சியின் மாநில மகளிர் அணி தலைவரும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான உமாரதி கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கூருகையில், ‘தென் மாவட்டத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜவினர் போட்டியிட வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனால் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடக்க வேண்டும்’ என்றனர்.