புதுடெல்லி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார். முன்னாள் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் மகனான ஹரிகிருஷ்ண சாஸ்திரி காங்கிரஸ் சார்பில் 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் ஆலோசகராக இருந்த ஹரிகிருஷ்ண சாஸ்திரியின் மகன் விபாகர் சாஸ்திரி நேற்று முன்தினம் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில்,விபாகர் சாஸ்திரி நேற்று லக்னோவில் உபி துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். இதுகுறித்து விபாகர் கூறுகையில்,‘‘ மோடியின் தலைமையின் கீழ் தான் என்னால் திறம்பட பணிபுரிந்து லால் பகதூர் சாஸ்திரியின் ஜெய் ஜவான்,ஜெய் கிசான் என்ற கனவை நிறைவேற்ற முடியும்’’ என்றார்.