புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது ஒன்றிய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. மீதமுள்ள இரண்டு மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஓய்வு பெறுகிறார்கள். இந்த இடங்களை நிரப்பவுதற்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக தரப்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை நேற்று காலை வெளியிட்டது. அதில், ‘‘தற்போது இணை அமைச்சராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜர் ஆகியோர் மத்தியப் பிரதேசத்திலும், அதேப்போன்று தற்போது ரயில்வே அமைச்சராக இருக்கும் அஸ்வினி வைஷ்னவ் ஒடிசா மாநிலத்திலும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தாராபுரம் சட்டப்பேரவை தேர்தலில், அமைச்சர் கயல்விழி செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதைத் தொடர்ந்து அவர், ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்பியாகி, ஒன்றிய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், மக்களவை தேர்தலில் நீலகிரி எம்பி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் அங்கு போட்டியிடுவதற்கான பணிகளையும் அவர் செய்து வந்தார். இந்தநிலையில், எல்.முருகன், மீண்டும் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் அவர் மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே அண்ணாமலையும் போட்டியிட மாட்டேன் என்று கூறி வந்தநிலையில் எல்.முருகனும் போட்டியில் இருந்து விலகியுள்ளது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* 7 ஒன்றிய அமைச்சர்களுக்கு இடமில்லை: 28 எம்பிக்களில் 4 பேருக்கு மட்டுமே பா.ஜவில் சான்ஸ்
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை எம்பிக்களில் 28 பேர் பா.ஜவை சேர்ந்தவர்கள். அவர்களில் தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபாலா, நாராயண் ரானே, வி முரளீதரன் உள்ளிட்ட 7 ஒன்றிய அமைச்சர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர்கள் மக்களவை தேர்தலில் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. மாநிலங்களவை எம்பியாக உள்ள எல். முருகன், பாஜ தலைவர் ஜெபி. நட்டா உள்ளிட்ட 4 பேருக்கு மட்டுமே பா.ஜ வாய்ப்பு வழங்கி உள்ளது.