கூடுவாஞ்சேரி: குடும்ப தகராறில் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், ரோஜா தெருவை சேர்ந்தவர் பாலாஜி (31). பெயிண்டர். இவருக்கு மனைவி திவ்யா (27), 7 வயதில் பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளனர். இதில், தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இதில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இருவருக்கும் நேற்றுமுன்தினம் இரவு வாக்குவாதம் முற்றியதில் திவ்யா அதே பகுதியில் 3வது தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துகொண்டு சென்றுவிட்டார். இதில், மனமுடைந்த பாலாஜி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஓட்டேரி எஸ்ஐ மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.