கூடுவாஞ்சேரி: அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், அண்ணா உயிரியல் பூங்கா சங்க தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் சரவணன், சரசு, உதவி செயலாளர்கள் இராமச்சந்திரன், மணிமேகலை, உதவி பொருளாளர் கவுசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்க பொது செயலாளரும், ஏஐசிசிடியூ மாநில சிறப்பு தலைவருமான இரணியப்பன் நிறைவுரையாற்றினார்.
இதில், ஆர்ப்பாட்டத்தின்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தின கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய கோரியும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரியும், நிரந்தர தொழிலாளர் செய்யும் அதே வேலையை செய்யும் தின கூலி தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், 8 மணி நேர வேலையை இரவு பணிக்கு அமல்படுத்த கோரியும், சீருடை, காலனி தாமதமின்றி உடனே வழங்க கோரியும், ஆதார் அட்டையில் உள்ள வயதை கணக்கிட்டு 60 வயது முடிந்தது என்று பணி நீக்கம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் சங்கத்தின் பொருளாளர் திவாகர் நன்றி கூறினார்.