சென்னை: புதிதாக 4,000 பேருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. கொரோனா தாக்கம் குறைந்த பிறகு புதிய பேருந்துகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்று அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் வெறும் 3,000 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன. குற்றம்சாட்டும் முன் தனது ஆட்சியில் என்ன நடந்தது என்பதை எடப்பாடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும். 300-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயக்கப்படுகின்றன. பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை எடுத்து வருகிறது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.