சென்னை: சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 3 மணி நேரம் தாமதமாக சென்னை வந்தது. சார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் 142 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்தது. திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பி சென்றது. கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 3 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 6 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.
வழக்கமாக, அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவில் இருந்து சென்னை வரும் ஏர் அரேபியா விமானம், மீண்டும் அதிகாலை 3.40 மணிக்கு சார்ஜா புறப்பட்டு செல்லும். இதற்காக நேற்று 153 பயணிகள் நள்ளிரவு 12 மணிக்கே விமான நிலையத்தில் சோதனைகள் அனைத்தையும் முடித்து காத்திருந்தனர். ஆனால் சார்ஜாவில் இருந்து வரவேண்டிய விமானம் தாமதமானதால் நீண்ட நேரம் காத்திருந்தனர். விமானம் வந்ததும், பயணிகள் ஏற்றப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சார்ஜா புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.