குளச்சல்: குளச்சல் அருகே வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி செய்த கொள்ளையனை தாயும்-மகளும் சேர்ந்து போராடி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாம் (63). அவரது மனைவி பரம ஜெசிலெட். இந்த தம்பதிக்கு ஜெபஷாலினி என்ற மகள் உள்ளார். ஓமன் நாட்டில் வேலைபார்த்து வந்த ஜெஸ்டின் சாம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். தற்போது வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஜெஸ்டின் சாம் நேற்று மாலை தனது பைக்கில் கடைக்கு சென்றுவிட்டார்.
அப்போது வீட்டில் பரம ஜெசிலெட் மற்றும் மகள் ஜெப ஷாலினி ஆகியோர் மட்டும் இருந்து உள்ளனர். இரவு சுமார் 7.15 மணி அளவில் திடீரென்று வீட்டுக்கதவை யாரோ தட்டி உள்ளனர். பரம ஜெசிலெட் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வாசல் முன்பு தயாராக நின்ற வாலிபர் ஒருவர் திடீரென பரம ஜெசிலெட்டை தாக்கிவிட்டு வீட்டுக்குள் புகுந்தார். மேலும் பரம ஜெசிலெட்டின் கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை பிடித்து இழுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பரம ஜெசிலெட் செயினை விடாமல் பிடித்துள்ளார். மேலும் கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு ஓடிவந்த ஜெப ஷாலினி தாயாரின் செயினை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்த கொள்ளையனை சரமாரியாக தாக்கினார்.
இன்னொரு நபர் அங்கிருப்பார் என்பதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன் அதிர்ந்துபோனான். ஆனாலும் அந்த கொள்ளையன் 2 பெண்களையும் கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். தாயும், மகளும் தைரியமாக போராடியதால் இனிமேலும் இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என பயந்துபோன கொள்ளையன் செயின் பறிப்பு முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். இதையடுத்து நிம்மதியடைந்த பரம ஜெசிலெட் கடைக்கு சென்றிருந்த தனது கணவருக்கு செல்போனில் தொடர்புகொண்டு நடந்த விபரத்தை கூறினார். உடனே அங்கிருந்து கிளம்பிய ஜெஸ்டின் சாம் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து ஜெஸ்டின் சாம் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றினர். அதனடிப்படையில் கொள்ளையனை தேடி வருகின்றனர். வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.