திண்டுக்கல்: கொடைக்கானல் பள்ளங்கி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மலை பகுதி முழுவதும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செடி, கொடிகள், புதர்வெளிகள் காய்ந்து காணப்படுவதால் ஆங்காங்கே தனியார் நிலங்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில், பள்ளங்கி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் இன்று காலை திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.
இதனால் அப்பகுதியில் உள்ள புல்வெளிகள், முட்புதர்களில் தீ பரவி மளமளவென எரிந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மலைச் சரிவுகளில் தீ பரவி வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வனப்பகுதிக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக தீ பற்றி எரிந்ததா? யாரேனும் தீ வைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.