டெல்லி: பிற்படுத்தப்பட்டோர் மருத்துவர் ஆகக்கூடாது என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது நீட் தேர்வு என தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார். பட்ஜெட் மீதான விவாதத்தில் தயாநிதி மாறன் எம்.பி.; ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் மீது வன்மத்துடன் பேசுகிறார். ஏழைகள் படும் கஷ்டத்தை அறியாதவர் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாடு அரசு .37,000 கோடி நிவாரணம் கேட்டு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. வெள்ள பாதிப்பை பார்வையிட நிர்மலா சீதாராமன் வந்தார்கள், கையசைத்தார்கள், சென்றார்கள்.
இதுவரைக்கும் எங்களுக்கு வந்தது பூஜ்ஜியம்தான். வரிப்பணத்தை கேட்டதற்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒரு மணி நேரம் தமிழ்நாடு அரசை வசைபாடினார். எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் லாபத்துக்காக 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீதுதான் போடப்பட்டுள்ளன. எமர்ஜென்சியை போல் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது பா.ஜ.க.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தநாள் முதல் தமிழ்நாட்டுக்கு எதிரான அரசாக இருந்து வருகிறது. இடைக்கால நிதி நிலை அறிக்கை கண்துடைப்புதான்; மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நாமம். ஏழை மக்களுக்கு நிதிநிலை அறிக்கை மூலம் எந்த பயனும் இல்லை. பட்ஜெட்டில் சமூக நலன் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு மானியத்தில் 3.3% -த்தை பட்ஜெட்டில் குறைத்துள்ளது; 13.2% உர மானியம் குறைக்கப்பட்டுள்ளது. என கூறிய அவர், பிரதமர் மோடியால் விளம்பரப்படுத்தப்பட்ட பேடிஎம் நிறுவனத்தின் இன்றைய நிலைமை என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.