Tuesday, October 22, 2024
Home » சென்னையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்குக்கு இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை: வாரத்தில் 3 நாட்கள் இயக்கம்

சென்னையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்குக்கு இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை: வாரத்தில் 3 நாட்கள் இயக்கம்

by Arun Kumar

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ஹாங்காங் நேரடி விமான சேவை, இன்று அதிகாலை முதல் மீண்டும் துவங்கியது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயங்கும். முதல் விமானத்தில் 129 பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர். சென்னை-ஹாங்காங்-சென்னை இடையே ஏற்கெனவே இயங்கி வந்த கேத்தே-பசிபிக் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நேரடி விமான சேவை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு, மார்ச் மாதத்துடன் நிறுத்தப்பட்டது.

முன்னதாக இந்த விமானம் சென்னையில் இருந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக இயங்கி, தொழில்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் நேரடி விமான சேவையை துவக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னை-ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் துவங்க கேத்தே-பசிபிக் ஏர்லைன்ஸ் முன்வந்தது. இதன்படி, சென்னையில் இருந்து வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் ஹாங்காங்குக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் கேத்தே-பசிபிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு, இன்று அதிகாலை 1 மணியளவில் மீண்டும் ஹாங்காங்கில் இருந்து 103 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான முனையத்தில் கேத்தே-பசிபிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்திறங்கியது. முதல் விமானத்தில் சென்னை வந்த பயணிகளை, சென்னை விமானநிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர், அதே விமானத்தில் சென்னையில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட முதல் விமானத்தில் 129 பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர். சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று மீண்டும் துவங்கப்பட்ட சென்னை-ஹாங்காங் நேரடி விமானசேவை விரைவில் வாரத்தின் 7 நாட்களிலும் இயக்கப்பட இருக்கிறது. தற்போது இந்த விமானம் மீண்டும் துவக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா, தொழில், வர்த்தகத் துறையினர் மிகுந்த பலனடைவர் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

fourteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi