அறிவிப்பு: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். நடந்தவை: கடந்த 2016ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் தமிழ் பெயர் பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம். கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பட்ஜெட்களில் தவறாது இடம் பெற்றுள்ளது இந்த திட்டத்தின் பெயர்தான்.
இதில் ஒன்றிய அரசின் இலக்கு வரும் மார்ச்சுக்குள் 2.95 கோடி வீடு கட்டித் தருவது. 8 ஆண்டுகள் ஆகியும் இந்த இலக்கே இன்னமும் எட்டப்படவில்லை. அதிலும், இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல வீடுகளுக்கு முறையாக நிதி வழங்காமல் அரசு இழுத்தடித்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய அரசின் பங்கு 50 சதவீதம், மாநில அரசின் பங்கு 50 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு முதல் தவணை பணம் கொடுத்ததோடு பல பகுதிகளில் அமைதியாக ஒதுங்கிக் கொண்டது ஒன்றிய அரசு.
ஏற்கனவே நிதியின்றி பரிதவிக்கும் மாநிலங்களால் என்ன செய்ய முடியும். இதனால், திட்டம் பல மாநிலங்களில் முடங்கிக்கிடக்கிறது. சில மாநிலங்களில் 80 சதவீத பங்களிப்பை தங்கள் நிதியில் இருந்து ஒதுக்கி திட்டப்பணிகளை முடித்துள்ளன மாநில அரசுகள். இதுதான் உண்மை நிலை. இந்த நிலையில், 5 ஆண்டில் 2 கோடி வீடு எப்படி சாத்தியமாகும். இது கிராம மக்களின் காதில் பூ சுற்றும் வேலை என்று சமூக ஆர்வலர்கள் விமர்ச்சித்துள்ளனர்.