நாகர்கோவில்: குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மைலோடு தேவாலய பங்கு தந்தை அலுவலகத்தில் கடந்த 20ம்தேதி போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பங்கு தந்தை ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பங்கு பேரவை துணைத்தலைவர் ஜஸ்டஸ் ரோக் (58), வின்சென்ட் (60), விபின் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் ரமேஷ் பாபு நாகை கோர்ட்டில் சரணடைந்தார். இந்தநிலையில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பங்குத்தந்தை ராபின்சனை நேற்று முன் தினம் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை தொடங்கியது. நேற்று முன் தினம் இரவு அவரை இரணியல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். எஸ்.பி. சுந்தரவதனமும் சென்று விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சம்பவ இடத்தில் யார்? யார்? இருந்தார்கள் உட்பட சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பங்குத்தந்தை ராபின்சன் தெரிவித்த பதில்கள் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நேற்று 2வது நாளாகவும் விசாரணை நடந்தது. கொலை நடந்து பங்கு தந்தை அலுவலகத்துக்கும் அவரை அழைத்து செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை விசாரணை முடிந்து அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.