பாட்னா: இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை ராகுல் காந்தி இன்று பீகாரில் மேற்கொள்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். மணிப்பூரில் ஜன.14ல் தொடங்கிய ராகுலின் நடைபயணம் ஜன.25ல் மேற்கு வங்கத்தை எட்டியது. இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் உள்ள பாக்டோக்ராவுக்கு ராகுல் நேற்று வந்தார்.
2 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு நேற்று மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைபயணம் இன்று பீகாரை அடைகிறது. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான (ஆர்ஜேடி) கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பாஜவுடன் கைகோர்த்து, 9வது முறையாக பீகார் முதல்வராக நேற்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்களாக பாஜவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்கா மற்றும் 6 அமைச்சர்கள் பதவியேற்றனர். பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில் ராகுலின் நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.