மதுரை அருகே அவனியாபுரத்தில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தன் பாவங்களை போக்கவே ராமேஸ்வரத்தில் புனித நீராடி, ராமர் கோயிலை திறந்து வைத்துள்ளார். ராமர் தன்னை காப்பாற்றுவார் என்று நினைக்கிறார். ஆனால் மக்களின் பிரச்னையை முன்னிறுத்தி இந்த தேர்தல் நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிற்கு புதிய விடிவு வரும். வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிய மோடிக்கும், மதவாதத்தை பரப்பும் ஆர்எஸ்எஸ், இந்தியாவை பாதுகாப்பு இல்லாமல் உருவாக்கிய அமித்ஷாவுக்கும் இந்தியா கூட்டணி வரும் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்காக சுமூகமாக தீர்வு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும், மீனவர்களை சிறைபிடிப்பதை தடுக்க எந்த முயற்சியும் செய்யாது ஒன்றிய அரசு. நமது மீனவர்கள் 3 மாதம் சிறையில் இருந்தப் பின்னரே விடுதலையாகின்றனர். ஆனால், தங்களால் தான் விடுவிக்கப்படுவது போல் தொடர்ந்து கதை விடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆட்சி மாற்றம் வர வேண்டும்.