தஞ்சை: அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய்விட்டனர் என்று ஓபிஎஸ்சை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கிப் பேசினார். தஞ்சை வல்லத்தில் இன்று காலை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது: நான் அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சை ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன். இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பது தெரிகிறது. இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள்.
அத்தனையும் ஒழித்து கட்டப்பட்டு விட்டது.நீதிமன்றம் மூலம், தேர்தல் ஆணையம் மூலம் நல்ல தீர்வை கண்டோம். அதிமுகவை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்ஜிஆர் தோற்றுவித்த இயக்கம். ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம். அந்த இரு தலைவர்களும் இறைவனின் சக்தி பெற்றவர்கள். எனவே நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள் தான் கெட்டு போவார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார்கள், அழிந்து போனார்கள் என்றார்.