சென்னை, ஜன.28: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நேரு உள் விளையாட்டு மைதானத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கடந்த வாரம் தொடங்கி வைத்தனர். இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், கால்பந்து போட்டியில் கலந்துகொள்ள நேபாள நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனைகள் 23க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் 5வது தளத்தில் தங்கி, போட்டியில் பங்கேற்று வந்தனர்.
நேற்று மதியம் போட்டியில் கலந்து கொள்வதற்காக 10க்கும் மேற்பட்ட கால்பந்து வீராங்கனைகள் நட்சத்திர ஓட்டலில் 5வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு லிப்டில் சென்றனர். அப்போது திடீர் என்று லிப்ட் நின்றதால் வீராங்கனைகள் உள்ளே சிக்கிகொண்டு கூச்சலிட்டனர். உடனடியாக, ஓட்டல் ஊழியர்கள் ஓடி வந்து கடப்பாரையை கொண்டு லிப்டின் கதவை உடைக்க முயன்றனர்.
அது தோல்வியில் முடிந்ததால் கோயம்பேடு தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்டீபன் தலைமையில் வீரர்கள் லிப்டின் கதவை லாவகமாக திறந்து உள்ளே சிக்கி இருந்த நேபாள நாட்டு 10 வீராங்கனைகளையும் பத்திரமாக மீட்டனர்.