தி ண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம்பெற முயன்றபோது, கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது நீதிமன்ற காவல், வரும் பிப்ரவரி 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப்பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார். எனவே, லஞ்சப்பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்தும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம், அமலாக்க துறை நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளது. “பாஜ ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதில்லை. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை எந்தவித விசாரணையும் நடத்தாதது ஏன்? அசாம் முதல்வர் மீது எப்ஐஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததா?” என தமிழ்நாடு அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
“பழிவாங்கும் போக்குடன் அமலாக்கத்துறை செயல்படுவதை தடுக்க புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும். பழிவாங்குதல் என்ற புகார் எழாத வகையில் நடவடிக்கை எப்படி தொடங்கவேண்டும் என்று நெறிமுறைகள் வகுக்கவேண்டும். அமலாக்கத்துறை, உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுக்கிறது. உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதே வேளையில், அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் எடுக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், அங்கித் திவாரி கைது தொடர்பான ஆவணங்களை, உங்களுக்கு வழங்கவேண்டியதில்லை என நெத்தியடி கொடுத்து, அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அமலாக்க துறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. இந்த உத்தரவு மூலம், அமலாக்க துறையை தனது கைக்குள் போட்டுக்கொண்டு பொம்மைபோல் ஆட்டுவிக்கும் ஒன்றிய அரசையும், உச்சநீதிமன்றம் மறைமுகமாக சாடியுள்ளது. ஒன்றிய அரசும், அமலாக்க துறையும், உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்குவது புதிதல்ல. உச்சநீதிமன்றம் ஏற்கனவே பலமாக குட்டு வைத்துள்ளது. அதாவது, அமலாக்க துறை இயக்குனராக இருந்த எஸ்.கே. மிஸ்ராவுக்கு, சட்ட விரோதமாக ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கிய உத்தரவை, உச்சநீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. அந்த காயம் ஆறுவதற்குள் இப்போது மீண்டும் சாட்டையடி கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை மட்டுமன்றி, எல்லா அரசு இயந்திரங்களையும் தேர்தலுக்காகவோ, தேர்தல் காரணங்களுக்காகவோ ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத்தின் இந்த கடிவாளத்துக்கு பிறகாவது அமலாக்கத்துறையும், ஒன்றிய அரசும் நடுநிலையோடு நடக்க வேண்டும்.