சென்னை: ஒன்றிய அரசின் இந்தி திணிப்பில் வேகம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன். ஏனென்றால் எனக்கு இந்தி தெரியாது. ” என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்து சரியானது பாராட்டத்தக்கது. குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றும்போது ஒன்றிய ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும் அவற்றின் பெயர்களையும் உள்ளடக்கத்தையும் பிற்போக்காக மாற்றியமைத்துள்ளது பாஜக அரசு. ஒற்றை மொழியை திணித்தால், நடைமுறையில் அது எதிராகவே முடியும் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தமிழ் வழியில் நீதித்துறை நடவடிக்கைகளை சாத்தியமாக்க மறுத்துவரும் ஒன்றிய ஆட்சி இந்தித் திணிப்பில் வேகம் காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.