செங்கல்பட்டு: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு நடத்தினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது தொடர்பாக நேரில் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்; ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகள் புக்கிங்கிற்கு 5,000 சதுர அடி இடமே இருந்தது. ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 300 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு கிளாம்பாக்கத்தில் பார்க்கிங் வசதி உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையின்றி பேசுவதை தவிர்த்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை எடுத்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் சில பிரச்சினைகள் ஏற்பட்டது, அதனை சரிசெய்ய ஆம்னி பேருந்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இனி இயக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைமேடை அருகில் மட்டுமே ஆம்னி பேருந்தை நிறுத்த வேண்டும். நெடுஞ்சாலைகளில் பயணிகளை இறக்கி விட்டு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது. கிளாம்பாக்கத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு செல்லக் கூடாது. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் வதந்திகளை பரப்பி குழப்பங்களை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.