தண்டையார்பேட்டை: ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியில் சந்தேகப்படும்படி 2 மர்ம நபர்கள் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டிருப்பதாக ராயபுரம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் சிவா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கடையிலிருந்து மதுபாட்டில்களை காரில் ஏற்றிய 2 பேரையும் கைது செய்து ராயபுரம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதுகுறித்து ராயபுரம் ஆய்வாளர் ரஜினி விசாரணை நடத்தியதில், அவர்கள் மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்த முகமது பாசில் (32) மற்றும் அகமது ரியாஸ் (26) என்பதும், இவர்கள் புதுச்சேரியில் இருந்து பீர்பாட்டில், மதுபாட்டில் என ஆயிரம் பாட்டில்களை கடத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, லோடு வேனில் அடுக்கி வைத்து, போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க மேலே அட்டைப் பெட்டியில் பார்சல் பொருட்களை வைத்து கடத்தி வந்துள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டையில் பினாயில் கடை வைப்பதாகக் கூறி இவர்கள் கடையை வாடகைக்கு எடுத்துள்ளனர். அங்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களை பதுக்கி வைத்து பாரிமுனை, மண்ணடி பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தேடி வருகிறார்கள். பிறகு கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 1,000 மது பாட்டில்கள் மற்றும் இனோவா கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஒரு குடோனில் 1000 வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.