சென்னை: சென்னையில் கடந்த 20 நாட்களாக நடந்த புத்தக காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 15 லட்சம் பேர் புத்தக காட்சிக்கு வருகை தந்துள்ள நிலையில் ரூ.18 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு பதிப்பாளர்களின் 47வது புத்தக காட்சி கடந்த 3ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதுவரை இந்த புத்தக காட்சிக்கு 15 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். பல்வேறு தலைப்புகளில் ரூ.18 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
நிறைவு நாளான நேற்று, புத்தக காட்சியில் இடம் பிடித்த பதிப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் சிறப்பு செய்யும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த புத்தக காட்சிநடப்பதற்கு உதவியாக இருந்த கொடையாளர்கள், நிறுவனங்கள் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பாராட்டி கவுரவித்தார்.
மேலும் பதிப்புத் துறையில் நூற்றாண்டு, பொன்விழா, வெள்ளிவிழா கண்ட பதிப்பாளர்களையும் பராட்டினார். அதன்படி, பதிப்புத் துறையில் 100 ஆண்டுகள் நிறைவு செய்த கடலங்குடி பப்ளிகேஷன், எம்.ஆர்.எம் அப்துற்றகீம் யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் ஆகிய 2 பதிப்பகங்கள், 50 ஆண்டுகளை நிறைவு செய்த 10 பதிப்பகங்கள், 25 ஆண்டுகள் நிறைவு செய்த 23 பதிப்பகங்கள் மற்றும் அவற்றின் பணியாளர்கள் ஆகியோரும் பாராட்டுப் பெற்றனர்.