ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் வறட்சி மாவட்டம் என குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள குறைந்த அளவிலான நீர், நில வளத்தைப் பயன்படுத்தி பல விவசாயிகள் சிறப்பான முறையில் சாகுபடி செய்து சாதித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சாகுபடிகளில் மிளகாய் சாகுபடி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் சம்பா மிளகாய் (குச்சி), கிழக்குப் பகுதியில் முண்டு எனப்படும் குண்டு மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இவை அடர்ந்த சிவப்பு நிறத்தில், ருசியும் அதிக காரத்தன்மையும் கொண்டிருப்பதோடு, சிறந்த மருத்துவக் குணங்களையும் இயற்கையாகவே பெற்றிருக்கிறது.
மன்னர்கள், ஆங்கிலேயர்கள் காலத்திற்கு முந்தைய காலம் தொட்டு பாரம்பரியமாக பயிரிட்டு வருவதால் இந்த மிளகாய் ராம்நாடு (ராமநாதபுரம்) முண்டு என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மிளகாய்த்தூள் உற்பத்தியாளர்களுக்கு இடையே ராம்நாடு முண்டு எனப்படும் இந்த மிளகாய் ரகத்துக்கு உலக அளவில் நல்ல கிராக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதியாகும் மிளகாய் வத்தல், மிளகாய்த்தூள், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், ஊறுகாய் வகைகள் போன்ற மிளகாயில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, சீனா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் சவூதி அரேபியா, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலத்தவர் அதிகமாக வாழும் பல நாடுகளில் ராம்நாட் முண்டு மிளகாயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 47 ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாகவும், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் இறவை சாகுபடியாகவும் (போர்வெல், கிணறு) மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளாத்திக்குளம், விருதுநகர் மாவட்டம் பரளச்சி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளில் விளையும் மிளகாய் ராமநாதபுரம் சந்தைக்கே விற்பனைக்கு வருகின்றன. இதனால் மாவட்ட அளவில் ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரம் டன் வரை காய்ந்த முண்டு மிளகாய் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சம் விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மூன்றில் ஒரு பங்கு கடலால் சூழப்பட்டிருந்தாலும் கூட, சுமார் 500 வருடங்களுக்கு முன்பே நீர் மேலாண்மை மற்றும் குடிமராமத்து திட்டத்தில் முன்னோடியாக இருந்திருக்கிறது. இங்கு ஆறுகள், கண்மாய் போன்ற அதிகமான நீர்நிலைகளைக் கொண்டு தன்னிறைவு பெற்றிருந்தபோதிலும், நாளடைவில் குறைவான பருவமழை, நீர்நிலைகள் மராமத்து செய்யாமை, மழைநீர் சேமிக்காதது போன்ற காரணங்களால் வறண்ட மாவட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கிறது
.
இத்தகைய மாவட்டத்தில் கடைகோடியில் அமைந்திருக்கிறது கமுதி. இப்பகுதியில் மானாவாரி எனப்படும் பருவமழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு நிலவும் அசாதாரண தட்பவெப்ப நிலையை மாற்றி, முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து ஆண்டிற்கு 15 டன் விதைகளை அரசுக்கு வழங்கியும், வேளாண் உற்பத்திப் பொருட்களை வெளிமாநிலங்கள், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தும் சாதனை புரிந்து வருகிறார் ராமர் என்ற இயற்கை விவசாயி.சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பும், வேளாண் பயிற்சியும் வழங்கி வரும் இவர் ராமநாதபுரம் மற்றும் அருகில் உள்ள விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து தேவையான தகவல்கள், விளக்கங்களைக் கூறி வருவதால் சில விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் தொழில்முனைவோராகவும் மாறி வெற்றி கண்டிருக்கிறார்.
மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையால் டெல்லியில் கடந்தாண்டு 2022 ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை நடந்த ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா வார விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட தேர்வாகி சென்றார். இந்த நிலையில் தற்போது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மில்லியனேரி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒன்றிய வேளாண்மை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்த ஆண்டு முதல் நாட்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த விருதுக்கு தேர்வு பெற்றிருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் 19 விவசாயிகள் தேர்வு பெற்றிருக்கிறார்கள். கமுதி இயற்கை விவசாயி ராமரும் அதில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவருடன் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளும் ரூ.75 லட்சம் அளவிற்கு மிளகாய் ஏற்றுமதி செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சாதனைக்கு வித்திட்ட இயற்கை விவசாயி ராமரைச் சந்தித்து பேசினோம்.
“ இந்தியாவில் காய்ந்த மிளகாய் உற்பத்தி 19 லட்சம் டன்னாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 28 ஆயிரத்து 468 டன்னில் இரண்டு மடங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் (விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி அடங்கும்) மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், இந்த மாவட்டம் மிளகாய் உற்பத்தியில் முதன்மை இடத்தில் இருக்கிறது. கடந்த 2022ல் நான் மட்டுமே 80 டன் சம்பா மிளகாயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தேன். இந்தாண்டு 200 டன்னிற்கு ஆர்டர் இருந்தும், 100 டன் மட்டுமே ஏற்றுமதி செய்தேன். இந்த இயற்கையான மிளகாய் விவசாயம் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.10 லட்சம் லாபம் கிடைக்கிறது. வறண்டு கிடந்த நிலத்தை சீரமைத்து சுமார் 20 வருடங்களாக பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை முறையில் சம்பா மிளகாய் சாகுபடி செய்து வருகிறேன்.
வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை, மானிய உதவிகள், அரசு திட்டங்களை முறையாக பயன்படுத்தி வருகிறேன். போர்வெல் உதவியுடன் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தி தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்கிறேன். இதனால் நல்ல மகசூல் கிடைக்கிறது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் வேளாண்மைத் துறை அதிகாரிகள் நேரடியாக வந்து விதைகளை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் ஆண்டிற்கு டன் கணக்கில் விதைகள் விற்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திலேயே அதிக அளவில் இயற்கை வேளாண்மையில் மிளகாய் உற்பத்தி செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த விருது என்னைப் போன்ற இயற்கை விவசாயிகளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும்’’ என மகிழ்ச்சியுடன் இந்த தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புக்கு:
ராமர் – 91594 05051
மாவட்டத்திற்கு பெருமை
இயற்கை விவசாயி ராமருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை கிடைத்திருக்கிறது என்கிறார், அம்மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வள்ளல் கண்ணன். “ இந்திய அளவில் இந்த ஆண்டுதான் முதல்முறையாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் விவசாயிகளுக்கு மில்லியனேரி விருது வழங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 விவசாயிகளை இவ்விருதுக்கு பரிந்துரைத்தோம். அதில் இயற்கை விவசாயி ராமர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார் அவர்.
இயற்கை விவசாயி ராமர்…
கடந்த 2022ம் ஆண்டில் இயற்கை விவசாயி ராமர் குறித்து தினகரன் விவசாயி இதழில் கட்டுரை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தன்னைத் தொடர்பு கொண்டு மிளகாய் சாகுபடி, வத்தல் விற்பனை குறித்து கேட்டதாகவும், அதற்கு விளக்கம் அளித்ததாகவும் நினைவுகூர்கிறார் ராமர்.