சென்னை: ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக சிங் தாக்கூர் பேசியதாவது: கேலோ இந்தியா என்பது தேசிய அளவிலான ஒரு பணியாகவும், சேவையாகவும் இருக்கிறது. இந்த போட்டிகள் மூலம் இந்திய நாடு மேலும் வலிமையாகவும், துடிப்பானதாகவும் மாறும். கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறைக்கும், கேலோ இந்தியாவுக்கான நிதியையும், உதவிகளையும் 3 முறை பிரதமர் உயர்த்திக் கொடுத்துள்ளார்.
இது இந்த விளையாட்டுக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. தமிழ்நாடு மக்கள் விளையாட்டில் ஈடுபடும் இந்த இளம் நட்சத்திரங்களை வரவேற்கவும், அவர்களை பாராட்டவும், அவர்களை ஊக்குவிக்கவும் தயார் நிலையில் இருங்கள். அவர்களின் இந்த பயணத்துக்கும் உதவியாக இருங்கள். இந்திய விளையாட்டுத்துறை வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும். ஜெய் பாரத், வணக்கம். இவ்வாறு அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.